மனிதர்களுக்கு அளிக்கப்படும் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை முறையான ‘எலக்ட்ரோகீமோதெரபி’ மூலம் உலகிலேயே முதன்முறையாக 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புற்றுநோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளது.
இங்கிலாந்திலுள்ள செஸ்டர் உயிரியல் பூங்காவில் வாழும் ‘ஜோடி ஃபோஸ்டர்’ எனப் பெயரிடப்பட்ட மலைப்பாம்பு ஒன்று, உணவருந்த முடியாமல் சிரமப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட வைத்தியப் பரிசோதனையில், அதன் தாடை எலும்பில் ‘ஃபைப்ரோசார்கோமா’ என்ற புற்றுநோய்க் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
ஆரம்பத்தில் அறுவை சிகிச்சை மூலம் அக் கட்டி அகற்றப்பட்ட போதிலும், மீண்டும் புற்றுநோய் தோன்றி தாடை எலும்பைச் சேதப்படுத்தத் தொடங்கியது.
பாம்பைக் காப்பாற்றச் செஸ்டர் உயிரியல் பூங்கா வைத்தியர்கள் மற்றும் லிவர்பூல் பல்கலைக்கழகப் புற்றுநோய் நிபுணர்கள் இணைந்து, மனிதர்களுக்குப் பயன்படுத்தப்படும் ‘எலக்ட்ரோகீமோதெரபி’ சிகிச்சையைப் பாம்பின் உடலமைப்பிற்கு ஏற்ப மாற்றியமைத்து வழங்கினர்.
வெப்பப் போர்வைகள் மூலம் பாம்பின் உடல் வெப்பநிலை சீராகப் பராமரிக்கப்பட்டு, சுமார் 90 நிமிடங்கள் இச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பின் மீதமிருந்த புற்றுநோய் செல்களை அழிக்க எலக்ட்ரோகீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அப் பாம்பு மிக விரைவாகக் குணமடைந்து தற்போது ஆரோக்கியமாக உள்ளது.
உலகிலேயே ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரினத்திற்கு இம்முறையில் வெற்றிகரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
