இலங்கையில் நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93,635 ஆக உயர்ந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆகப் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் நாடு முழுவதும் 76 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிஅபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
மொத்த டெங்கு நோயாளர்களில் பாதியளவிற்கும் அதிகமானோர், அதாவது 52.94 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். தெற்கு மாகாணத்தில் 13,719 பேரும் மத்திய மாகாணத்தில் 8,476 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட மட்டத்தில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 19,945 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேலும் கொழும்பு மாவட்டத்தில் 18,588 பேரும், கண்டியில் 6,786 பேரும், மாத்தறையில் 6,082 பேரும், களுத்துறையில் 6,059 பேரும், காலியில் 5,133 பேரும், இரத்தினபுரியில் 4,981 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாதாந்தப் பதிவுகளின்படி ஜூலை மாதத்திலேயே அதிகபட்சமாக 29,964 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஜூன் மாதத்தில் 21,533 பேரும், ஆகஸ்ட் மாதத்தின் முதல் 21 நாட்களில் 8,297 நோயாளர்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
