21.8 C
Scarborough

நாமல் ராஜபக்‌ஷவின் உயிருக்கு அச்சுறுத்தல்: குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

Must read

சிறைச்சாலைக்குள்ளேயே ஒரு கலவரத்தை உருவாக்கி, அந்த மோதலின் மூலம் நாமல் ராஜபக்ஷவின் உயிரைப் போக்குவதற்குச் சில அரசியல் அமைப்புகளின் உறுப்பினர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதைவிடக் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி, சமூக வலைத்தளங்கள் முழுவதும் இந்த அச்சுறுத்தல் பிரசாரம் செய்யப்பட்டு வருவதாகவும் நாமலின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அக் கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி  சனிக்கிழமை (05) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இம்முறைப்பாட்டை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

எமது கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ளார். இந்தச் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து நாங்கள் இந்த நேரத்தில் பேச விரும்பவில்லை. ஏனெனில், நாங்கள் சுயாதீனமான நீதிமன்றத்தின் மீதும் விசாரணைகளை நடத்தும் நிறுவனங்களின் சுயாதீனத்தன்மை மீதும் முழுமையான நம்பிக்கை வைத்துள்ளோம். அந்த விசாரணைகளுக்கு எமது முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறோம்.

ஆனால், அவர் சிறைபிடிக்கப்பட்டு 24 மணித்தியாலங்கள் கடப்பதற்கு முன்பாகவே, திட்டமிட்ட முறையில் ஒரு பிரசாரம் சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்படுவதை நாங்கள் அவதானித்துள்ளோம். சிறைச்சாலைக்குள்ளேயே ஒரு கலவரத்தை உருவாக்கி, அந்த மோதலின் மூலம் நாமல் ராஜபக்ஷவின் உயிரைப் மாய்ப்பதற்கு சில அரசியல் அமைப்புகளின் உறுப்பினர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதைவிடக் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி, சமூக வலைத்தளங்கள் முழுவதும் இந்த அச்சுறுத்தல் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

அத்துடன், அவருக்கு ஆதரவாக எமது கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் செயற்பாட்டாளர்களும் எதிர்வரும் வியாழக்கிழமை நாடு முழுவதும் பிரம்மாண்டக் கூட்டங்களை நடத்தத் தயாராகி வருகிறார்கள். இந்த அறிக்கைகள் மூலம் அந்தப் பங்கெடுப்பாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. இவ்வாறான திட்டமிட்ட அச்சுறுத்தல்களின் பின்னணியில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் உறுப்பினர்களே செயற்படுகிறார்கள் என்பது எமக்குத் தெளிவாக உணர்கிறது. அது தொடர்பான முழுமையான தகவல்களை நாங்களே சேகரித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடாக அளித்துள்ளோம்.

சிறைச்சாலைக்குள் அசம்பாவிதங்களை உருவாக்குவோம் என்று அச்சுறுத்துவதால் நாங்கள் பயந்துவிடப் போவதில்லை. நாங்கள் வன்முறையாளர்கள் அல்லர்; தர்மத்தையே நம்புகிறோம். இந்த அரசாங்கம் வந்ததிலிருந்து உண்மையை வெற்றிபெறச் செய்ய நாங்கள் ஒரு தர்ம யுத்தத்தையே நடத்தி வருகிறோம். கட்சி மறுசீரமைப்புப் பணிகளை நாங்கள் திட்டமிட்டபடி தொடர்ந்து முன்னெடுப்போம்.

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நாங்கள் கூட்டத்துக்கு எதிர்பார்ப்பதை விட மூன்று மடங்கு அதிகமான மக்கள் ஆதரவு பெருகியுள்ளது. கட்சியின் தலைமையகத்துக்கு வரும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மூலமாக எமது ஆதரவாளர்களும் மக்களும் மீண்டும் விழிப்படைந்துள்ளது தெரிகிறது. நாமல் ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காகவும் எமது கட்சியின் எதிர்காலத்தூகவும் கிராமங்கள் தோறும் மக்கள் தாமாகவே முன்வந்து போதி பூஜைகளையும் ஆசீர்வாத வழிபாடுகளையும் தொடங்கியுள்ளனர்.

எதிர்த்தரப்பினர் உருவாக்கிய இந்த அலை, தற்போது ஒரு மக்கள் எழுச்சியாக மாறியுள்ளது. அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தை யாராவது தடுத்து நிறுத்த நினைத்தால், இலங்கை வரைபடத்திலிருந்து அனுராதபுரத்தையே அழித்தால் மட்டுமே முடியும். மாறாக, திட்டமிட்டதை விட மூன்று, நான்கு மடங்கு அதிகமான மக்களுடன் இந்த நடவடிக்கையை நாங்கள் வெற்றிகரமாகச் செய்வோம்.

சிறைச்சாலைக்குள் இதற்கு முன்னரும் சில மோதல்கள் நடந்துள்ளன. அந்த மோதல்கள் மூலம் விடயங்களை முடித்துவிடுவோம் என்ற தொனியிலேயே பேசுகிறார்கள். இவ்வாறான ஒரு பின்னணியில்தான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல படுகொலை செய்யப்பட்டார் என்பது எமக்கு நினைவுக்கு வருகிறது. எனவேதான், இந்த ஆபத்தான அச்சுறுத்தல் குறித்து சட்டப்பூர்வமாக முறைப்பாடு செய்துள்ளோம். இவ்விவகாரத்தில் உடனடி விசாரணை நடக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article