நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர மண்சரிவு மற்றும் வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,280 ஆக அதிகரித்துள்ளதுடன், 5,620க்கும் மேற்பட்டோர் இன்னமும் காணாமல் போயுள்ளனர்.
இரண்டாவது வாரமாகப் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும், காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்காததால், உறவினர்கள் நம்பிக்கையிழந்து அடையாளப் பூதவுடல்களை உருவாக்கி இறுதிச் சடங்குகளைச் செய்து வருகின்றனர்.
நேபாள தேசிய அனர்த்த குறைப்பு மற்றும் முகாமைத்துவ அதிகாரசபையின் தகவலின்படி,
நேபாளத்தில் மட்டும் 1,259 பேர் உயிரிழந்துள்ளதுடன், 583 வெளிநாட்டவர்கள் உட்பட 5,083 பேர் காணாமல் போயுள்ளனர்.
மிகவும் பாதிக்கப்பட்ட ரசுவா மாவட்டத்தில், காணாமல் போன உறவினர்களின் உடல்கள் கிடைக்காததால், ‘காஸ்-குஷ்’ எனப்படும் புனிதப் புற்களால் மனித உருவ பொம்மைகளைச் செய்து, அவற்றைக் காத்மாண்டுவின் பசுபதி ஆரியகாட் தகன மைதானத்தில் தகனம் செய்து இறுதிச் சடங்குகளை உறவினர்கள் நிறைவேற்றி வருகின்றனர்.
சடலங்களை சேமித்து வைப்பதில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால், சித்வான் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத சடலங்களின் டி.என்.ஏ மாதிரிகளைச் சேகரித்த பின்னர் பொலிஸார் அடக்கம் செய்து வருகின்றனர்.
சீனாவின் தென்மேற்கு சிசாங் (திபெத்) தன்னாட்சிப் பகுதியில் உள்ள ‘கியிரோங்’ எல்லைக் கடவைப் பகுதி வெள்ளத்தில் மூழ்கியதில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், 261 வெளிநாட்டவர்கள் உட்பட 541 பேர் காணாமல் போயுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி நேபாளத்தின் ‘லாங்டாங் லிரங்’ மலையில் சுமார் 5,200 மீற்றர் உயரத்தில் அமைந்திருந்த பனிப்பாறை பிளவுபட்டு விழுந்ததால் ஏற்பட்ட பனி-பாறை சரிவே இந்தப் பிரம்மாண்ட வெள்ளப் பெருக்குக்குக் காரணமாகும்.
தற்போது 21,400 க்கும் மேற்பட்ட இராணுவ மற்றும் பாதுகாப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள போதிலும், வீதிகள் மற்றும் தொலைத்தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதால் நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதில் பெரும் சவால்கள் நிலவுகின்றன. தொற்நோய்கள் பரவாமல் தடுக்கவும் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
